திங்கள், 21 ஜூன், 2021

நல்ல தமிழ்ச் சொற்கள் — 3

மாமண்டூர்



மாமண்டூர் என்று கூறியதும் நம் நினைவுக்கு வருவது சிற்பக் கலை தான். ஆனால் இந்த ஊர்ப் பெயரில் உள்ள ஒரு சொல் இன்று அறிவிலி எனும் பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆம், அந்த சொல் மண்டு என்பது தான். அறிவில்லாத எனும் பொருளில் வழங்கப்பட்டு வரும் இச்சொல்லுக்கு என்ன பொருள்?

மண்டு — மண்டுதல் என்பது அதன் தொழிற்பெயர் ஆகும். மண்டுதல் என்றால் நிரம்பியிருத்தல்  என்று பொருள்.

உதாரணமாக

வீட்டில் சாம்பிராணி புகை மூட்டுகிறோம். அப்போது வீடு முழுவதும் புகை மண்டும் என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

இதேபோல் நிறைய பால் அருந்தும் குழந்தைகளைக் கேலியாக நல்லா ஒரு படிப்பாலை மண்டுகிறது என்று கூறுவது வழக்கம்.

ஆக மண்டு என்றால் நிரம்பி இருத்தல் என்பது பொருள். மாமண்டூர் என்னும் ஊர் பெயர் உருவாகக் காரணம், அறிவுடையோர் நிறைய பேர் நிரம்பியிருந்த ஊர் என்பதால் அப்பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது.

இப்படி அறிவால், ஏதேனும் பொருளால் நிரம்பியிருத்தல் என்னும் பொருள் தரக்கூடிய சொல்லை அறிவிலி என்ற பொருள் தரக்கூடிய சொல்லாகப் பயன்படுத்துவது வேதனை தருகிறது.

காப்புமாறி


மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி நிலம். இக் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் குறவர் என்றழைக்கப்பட்டனர்.
இவர்கள் சமவெளிப் பகுதிகளில் பயிர் செய்து வாழ்ந்தனர். அவ்வாறு பயிர் செய்து வாழும் இவர்கள் பயிரினைக் காவல் காக்கும் தொழிலையும் செய்து வந்தனர். இக்காவல் செய்யும் தொழிலை இரவு பகல் என்று இரண்டு வேளைகளிலும் மாறி மாறி காவல் புரிந்து அத்தொழிலை செய்து வந்தனர். இங்ஙனம் இரவு பகல் என்று இருவேளைகளிலும் மாறி மாறி காப்பு செய்ததால் காப்பு மாறி என்று அத்தொழிலை செய்வோர்  அழைக்கப்பட்டனர். காப்பு மாறி என்ற சொல்லானது இன்று கேப்மாரி என்னும் ஏசுதல் பொருளில் வழங்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியது.

தொடரும்....

1 கருத்து:

அழகுராஜ் ராமமூர்த்தி சொன்னது…

தேவடியாள் சொல் திரிந்த மாதிரி.. தொடர்ந்து இப்படியான சொற்கள் குறித்த பதிவுகள் பற்றி எழுதுவது நன்றாக இருக்கிறது அம்மா..

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...