நாதாரி
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பன்றி மேய்க்கும் சமூகத்தவரைக் குறிக்கக்கூடிய சொல்லாக இச்சொல் வழங்கப்பட்டது. இன்றும் இச் சமூகத்தவர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியத்தில் பன்னிரு நிலங்களை பின்வருமாறு தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
"தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றிஅருவா அதன்வடக்கு — நன்றாய சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண்" என்று 12 நிலங்களை செந்தமிழ் பேசும் நாடுகளாக அக்காலத்தில் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாடுகளாவன,
1. தென்பாண்டி நாடு 2. குட்டநாடு
3. குடநாடு 4. கற்கா நாடு
5. வேணாடு, 6. பூழி நாடு, 7. பன்றி நாடு,
8. அருவா நாடு, 9. அருவா வடதலை நாடு,
10. சீத நாடு, 11. மலைய நாடு (மலையமான் நாடு) 12. புனல் நாடு என்று 12 நிலங்களாக அக்காலத்தில் தமிழகம் விளங்கியது. இதில் பன்றிநாடு என்ற நாடு தற்போதைய தென் பகுதியாக விளங்குகின்ற திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பகுதியாக குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய தமிழகத்தின் தென்பகுதியில் பன்றி மேய்க்கக்கூடிய சமூகத்தைசா சார்ந்த மக்களை அழைக்கக்கடிய ஒரு பெயராக வழங்கப்பட்டது தான் நாதாரி என்ற சொல். ஆனால் இன்று அது வசைச் சொல்லாக மாறி இருப்பது வருத்தத்திற்குரியது.
படவா
இச்சொல் முடிதிருத்தும் தொழிலாளிகளைக் குறிக்கக்கூடிய சொல்லாக விளங்கியது. மேலும் முடிதிருத்தும் சமூகத்தில் இந்த படவா என்ற பிரிவினர் மேல்சாதியினர் வீட்டுக்கே சென்று முடி திருத்தும் பணியைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது. இங்கனம் முடிதிருத்தும் சமூகத்தை குறிக்கக் கூடிய ஒரு சொல் இன்று வசைச் சொல்லாக மாறி இருப்பது வேதனை தருகிறது.
வெட்டி வேலை
வெட்டி வேலை எனும் சொல்லானது ஒரு காலத்தில் ஏரி குளம் கண்மாய்களை வெட்டுபவர்கள் குறிப்பிடும் சொல்லாக கருதப்பட்டது. எவ்வாறெனில் அக்காலத்தில் ஏரி குளம் கண்மாய் இவற்றை வெட்டுவதற்கு கிராம மக்கள், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இதற்கு யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. காரணம் அவர்கள் யாரும் ஊதியம் பெற விரும்பவில்லை. இச்செயலை ஒரு தொண்டு மனப்பான்மையோடு செய்தார்கள் என்று தான் கூறவேண்டும். ஊரின் நன்மையே நம் நன்மை என்று கருதி அம்மக்கள் செய்தார்கள். ஆகவே அந்த வேலைக்கு அவர்கள் ஊதியம் பெறவில்லை. மண்வெட்டியால் மண்ணை வெட்டி ஏரி குளம் கண்மாய்களை ஏற்படுத்திய காரணத்தினால் இவ் வேலைக்கு வெட்டி வேலை அதாவது மண்ணை வெட்டும் வேலை என்று குறிப்பதற்காக வெட்டி வேலை என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று எந்த வேலையையும் செய்யாதவர்களைக் குறிப்பிடும் சொல்லாக இது பொருள் மாறி வழங்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக