புதன், 19 மே, 2021

துணை எழுத்துக்கள்



தமிழ் மொழி எழுத்துக்களின் வரிவடிவங்கள் குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக...,

தமிழ் எழுத்துருக்களை குறில் நெடில் என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் குறில் எழுத்துக்கள் என்றாலும், நெடில் எழுத்துக்கள் என்றாலும் அவை ஒவ்வொன்றும் தத்தம் ஒலிக்குறிப்புக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துருவைப் பெற்று அமைகின்றன என்பதை நாம் முன்னர் கண்டோம்.

தமிழ் மொழியின் ஒவ்வொரு ஒலிக்குறிப்புக்கும் ஏற்றவாறு எழுத்துரு கொடுக்க பல துணை எழுத்துக்கள் உடனிற்கின்றன. அத்தகைய துணை எழுத்துக்களின் பெயர்கள் நமக்கு தெரியுமா?

நமக்குத் தெரிந்த துணை எழுத்தின் பெயர் துணைக்கால், ஒற்றைக் கொம்பு மற்றும் இரட்டைக் கொம்பு அவ்வளவே. 

நம் முன்னோர்கள் தமிழ் மொழியின் எழுத்துக்கள் அனைத்திற்கும் பெயரிட்டு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளவே இக்கட்டுரை.

துணையெழுத்துக்களின் பெயர்கள்

கீழ்ப்பிறை, துணைக்கால், ஒற்றைக் கொம்பு, கொம்புக்கால், இரட்டைக் கொம்பு, இணைக்கொம்பு, சாய்வுக்கீற்று, இறங்குக்கீற்று, பின்வளைக்கீற்று, மடக்கேறுகீற்று, மடக்கேறு கீற்றுக்கால், மேல் விலங்கு, கீழ் விலங்கு, மேல் விலங்குச்சுழி, கீழ் விலங்குச்சுழி, இறங்கு கீற்றுகீழ் விலங்குச்சுழி என்பனவாம். 

துணை எழுத்தைப் பெறும் எழுத்துக்கள்

கீழ்ப்பிறை — ஆ எனும் எழுத்தில் கீழ் நோக்கி இழுக்கப்படும் வளைவிற்கு உரிய பெயர். இதற்கு பிறைச் சுழி என்றும் பெயர் உண்டு.

துணைக்கால் — கா, கொ, கோ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

ஒற்றைக் கொம்பு — செ, தெ, கொ, பௌ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

கொம்புக்கால் — ஊ பௌ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

இரட்டைக் கொம்பு — கே, மே, லோ, போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது. இதற்கு கொம்புச்சுழி என்ற பெயர் உண்டு.

இணைக்கொம்பு — கை, பை, டை போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது. இதற்கு சங்கிலிக் கொம்பு, ஐகாரக் கொம்பு என்றும் பெயர் உண்டு.

சாய்வுக்கீற்று — ஏ எனும் எழுத்தின் கீழே சாய்த்து இழுப்பதால் இப்பெயர் பெற்றது.

இறங்குக்கீற்று — ஙு, சு, பு, யு, வு, போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

பின்வளைக்கீற்று — கூ எனும் எழுத்தை எழுதப் பயன்படுகிறது.

மடக்கேறுகீற்று ணு, து, நு, று, னு,  போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

மடக்கேறு கீற்றுக்கால் —  ணூ தூ நூ றூ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

மேல் விலங்கு — கி, சி, நி, மி போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

கீழ் விலங்கு — மு, ரு, ழு போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

மேல் விலங்குச்சுழி — கீ, சீ, ணீ, வீ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

கீழ் விலங்குச்சுழி — மூ, ழூ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

இறங்கு கீற்றுகீழ் விலங்குச்சுழி — பூ, யூ, வூ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.

இத்துணை எழுத்துக்களின் பெயர்களை இனியேனும் நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். மறவாமல் சொல்லிக் கொடுப்போம்.




1 கருத்து:

Unknown சொன்னது…

தெரியாததை தெரிந்து கொண்டேன்

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...