வெள்ளி, 2 டிசம்பர், 2022

வாழ நினைத்தால் வாழலாம்


கவியரசு கண்ணதாசனின் அற்புதமான வரிகளின் வரிசையில் இவையும் ஒன்று. 

"பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும். பார்த்து நடந்தால் பயணம் தொடரும். பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும். கதவு திறந்தால் காட்சி கிடைக்கும். காட்சி கிடைத்தால் கவலை தீரும். கவலை தீர்ந்தால் வாழலாம்" 

இவ்வரிகள் மேலோட்டமாக பார்த்தால், ஒரு மனிதன் ஏன் வாழ வேண்டும் என்று பார்க்க தெரிந்து விட்டால் அவன் வாழ வேண்டியதற்கான பாதை தெரியும். அந்த பாதையில் பார்த்து கவனமாக நடந்தால் அதாவது வாழ்ந்தால் வாழ்க்கை பயணம் தொடரும். வாழ்க்கை பயணம் தொடர்ந்தால் நாம் அடைய வேண்டிய இலக்கின் கதவுகள் திறக்கும். கதவுகள் திறந்தால் வெற்றித்திருமகளின் காட்சி கிடைக்கும். அவளின் காட்சி கிடைத்த பிறகு கவலை இருக்குமா என்ன? தீரும் தானே.  

எவ்வளவு ஆழமான கருத்தை கண்ணதாசன் எவ்வளவு எளிமையாக சொல்லிச் சென்றுள்ளான். இல்லையா. 

இதே வரிகளை நாம் அறிவியல், உடலியல், மனோதத்துவவியல், ஆன்மவியல் என்ற அடிப்படையில் ஆன்மிகவியலாகக் கண்டால் பேருண்மை விளங்கும். 

அழியாத ஆன்மாவைச் சுமப்பதற்காகப் பிறந்ததே இவ்வுடல். எனவே பரிசுத்தமான ஆன்மாவைச் சுமக்கும் உடலும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் அல்லவா. அப்படி என்றால் இவ்வுடலின் இயக்கத்தை நாம் பார்க்கத் தெரிந்து கொள்வது அவசியம் தானே. 

இதனைத் தான் சித்தர்கள் தங்கள் பாடல்கள் முழுவதும் சொல்லிச் சென்றுள்ளனர். அதனை வழிவழியாக வந்த குருமார்கள் பண்டிதர்கள் யோகியர்கள் ஞானியர்களும் நமக்கு ஆங்காங்கே கற்றுக் கொடுத்துக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படி சித்தர்கள் சொன்ன இரகசியங்களை ஒரு குருவின் வழி நாம் கற்றுக் கொண்டு, நம் உடலின் இயக்கத்தை தெரிய முற்படுகிறோம் அதைத் தான் தியானம், யோகம், குண்டலினி யோகம், காயகல்பயோகம் என்றெல்லாம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்து பார்க்கிறோம். 

நம் உடலின் இயக்கத்தை தெரிந்து கொண்டால், இயக்கத்திற்கான ஆன்ம வழிப்பாதை தெரிந்துவிடும். அவைதான் நம் உடலில் சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, துரியம் போன்றவை ஆகும். இந்த சக்கரங்கள் வழிப்பாதையில் பார்த்து கவனமாக நடந்தால் இறைவனை அடைய வேண்டிய நிலைக்கான கதவுகள் திறக்கும். கதவுகள் திறந்து விட்டால் இறைவனின் காட்சி கிடைக்கும். இறைவனையே கண்ட பிறகு கவலை இருக்க வழியுண்டோ? இல்லை தானே!!!! 


இந்த நல்ல கருத்தைப் பதிவு செய்ய வாய்பளித்த இறைவனுக்கும் குருவிற்கும் நன்றி 🙏🙏


நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...