சனி, 16 அக்டோபர், 2021

தாதா

தாதா என்ற இந்த சொல்லை கேட்ட உடனேயே அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் தாதா என்ற சொல் மக்கள் மத்தியில் பெரும்பாலும் பேசப்படும் ஒரு சொல்லாக இருக்கிறது என்றால் மிகையில்லை. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது  செய்தித்தாள்கள் ஆகட்டும் அல்லது ஏதோ ஒரு தகவல் தொடர்பு ஊடகமாக இருந்தாலும் இன்றைக்கு தாதா என்ற சொல் மிகவும் அதிகளவில் பேசப்படும் பொருளாக அல்லது பேசப்படும் சொல்லாக இருக்கிறது என்று கூறலாம். வடமொழியில் பயன்படுத்தப்படும் தாதா என்ற என்ற சொல்லையே எல்லா மொழிகளிலும் இன்று வழங்கப்பட்டு வருகிறது எனலாம். அச்சொல்லின் பொருளை நாம் தமிழ்ப்படுத்தவில்லை. ஆனால் அச்சொல்லின் ஒலிக்குறிப்பை அப்படியே நாம் பயன்படுத்துகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சொல் வழங்கப்படும் பொருள் என்ன என்றால் ஒருவன் வீட்டுக்கும் சமூகத்திற்கும் கட்டுப்படாத பிள்ளையாக உருவாகிறான் என்றால் அவனை வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்று அழைப்போம். மேலும் அவன் சமூகத்தால் ரவுடி என்று அழைக்கப்படுவான் இல்லையா. இப்படி அடங்காப்பிள்ளை ரவுடி என்றெல்லாம் அழைக்கப்படக்கூடிய இச்சொல்லைத்தான் வடமொழியில் தாதா என்று வழங்கப்படுகிறது.  ஆனால் தமிழ் மொழியிலும் தாதா என்ற சொல் இருக்கிறது தெரியுமா? ஆம். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டில் ஒரு பாடல்.

"சுரதந் தனில்இளைத்த தோகை; சுகிர்த

விரதந் தனில்இளைத்த மேனி; நிரதம்

கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற்                                                                   —பட்ட

வடுதுளைத்த கல்அபிரா மம்" எனும் 

இப்பாடலில், நிரதம் கொடுத்திளைத்த தாதா என்ற வரியில் வரும் தாதா என்ற சொல்லுக்குக் கொடையாளி என்று பொருள். எப்படி? 

ஒரு முறை சோழனும் ஔவையும் பேசிக்கொண்டிருந்த பொழுது சோழனுக்கு திடீரென்று ஒரு ஐயம் ஏற்பட்டது. அது என்னவென்றால், உலகில் மிகவும் அழகானது எது என்று ஐயம் ஏற்பட்டது. ஆகவே அவன் ஔவையிடம் கேட்டான். ஔவையே உலகில் மிகவும் அழகானவை எவை? என்று கேட்டான். அதற்கு அவர் பாடிய பாடல்தான் இப்பாடல். இதில் எதை எதை அழகு என்று ஔவை கூறியிருக்கிறார் என்றால், தலைவனுடன் கூடிக் களித்துப் பின் அதனால் ஏற்பட்ட உடல் சோர்விலும் கூட அத்தலைவியும்; இறைவனை எண்ணி பல நாட்கள் விரதம் பூண்டதால் உடல் மெலிந்த பக்தரின் மேனியும்; வரியவருக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வம் அனைத்தையும் இழந்து போன கொடையாளியும்; போரிலே பகைவரை எதிர்த்துப் போர் புரிந்து அதனால் ஏற்பட்ட விழுப்புண் பெற்ற வீரனின் உடலும்; அங்ஙனம் போரில் இறந்த வீரர்களுக்கு நடப்படும் நடுகற்களும் சான்றோர்க்கு மிகவும் அழகானவை ஆகும் என்று ஔவையார் தன் பாடலில் குறிப்பிடுகின்றார். இதிலே தாதா என்ற சொல் கொடையாளி என்ற பொருளை நமக்கு உணர்த்துகின்றது. 

இவ்வாறு தமிழ்மொழியில் தாதா என்ற சொல் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வத்தையெல்லாம் இழந்து போன கொடையாளி என்ற பொருளை  உணர்த்துவது வியப்பை நல்கியபோதும், தமிழின் சிறப்பையும் தமிழனின் பெருமையையும் ஒருசேர உணர முடிகிறது என்றால் மிகையில்லை.


நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...