புதன், 21 ஜூலை, 2021

கன்னல்


"மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் 
பொன்னான மலரே 
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் 
தானாடும் நிலவே 
மின்னல் மின்னல் கொடி 
போலாடும் அழகே 
கன்னல் கன்னல் மொழி 
நீ பாடு குயிலே 
கட்டுக்குள்ள நிற்காது 
திரிந்த காளையை 
கட்டி வைத்து கண் 
சிரிக்கும் சுந்தரியே 
அக்கரையும் இக்கரையும் 
கடந்த வெள்ளத்தை 
கட்டி அணை கட்டி 
வைத்த பைங்கிளியே 
என்னில் நீயடி 
உன்னில் நானடி" 

என்ற இந்த அழகான வரிகள் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் வரிகள். இது ஒரு தமிழ் திரைப்படத்தில் வந்த அழகான திரைப்பட பாடல். இந்த பாடலை கேட்டு ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு ரம்மியமான  இசையுடன் கூடிய  பாடல். இப்பாடல் அடிகளில் ஒரு அழகான சொல் ஒளிந்திருக்கிறது. அது கன்னல் மொழி என்பதாகும். அது என்ன கன்னல் மொழி? இதற்கு என்ன பொருள்? அவற்றை இங்கே காண்போம்.

கன்னல் பொருள்


கன்னல் என்றால் கரும்பு என்று பொருள் கூறுகின்றது அகராதி. அதுமட்டுமல்ல கரும்பில் இருந்து கிடைக்கக்கூடிய சாறு (கரும்புச்சாறு), அதைக் காய்ச்சி கிடைக்கக்கூடிய பாகு (மணற்பாகு), பாகு முதிர்ந்த பிறகு கிடைக்கக்கூடிய சர்க்கரை இவை அனைத்திற்குமே கன்னல் என்று பெயர் கூறுகின்றது.

மேலும் கன்னல் எனும் சொல்லுக்கு நாழிகை வட்டில், நாழிகை, ஒரு வகைச் சிறு குருவி, கரகம் என்றும் பொருள் உணர்த்தப்படுகின்றது. 

இராமாயணத்தில் கன்னல்
"இன்னல் அம்பர வேந்தர்க்கு இயற்றிய
பன்னலம் பதினா லாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால்வளை
வில்நலம் புகழ்ந் தேங்கி வெதும்புவாள்" 

எனும் காட்சிப்படலத்து அடிகள் இராமன் காட்டில் கரன் தூடணன் முதலியோர் உள்ளிட்ட (14000) பதினாலாயிரம் படைகளை மூன்று கன்னல் நேரத்தில் வென்றான் என்று கூறுகின்றது. கன்னல் என்றால் நாழிகை என்று பொருள். (2 1/2) இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். அதாவது 60 நிமிடங்கள். அப்படி என்றால் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். எனவே மூன்று கன்னல் என்பது மூன்று நாழிகை. அதாவது 72 நிமிடங்கள். அதாவது 1.12 மணி நேரம் ஆகும். 

குறுநீர்க் கன்னல்

"பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப" 

எனும் முல்லைப்பாட்டு வரிகள் அக்காலத்தில் நாழிகையைக் கணக்கிட்டுக் கூறுவதற்குப் பயன்படுத்திய நாழிகை வட்டில் பற்றி குறிப்பிடுகின்றது. இதனைக் குறுநீர்க் கன்னல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கரும்பின் வேறு பெயர்கள்



கன்னல், கழை, இக்கு, வேழம், வெகுரசம், வெண்டு, தும்பு, அங்காரிகை, ஈன், ஆலை, இக்கலம் என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.

செவ்வாய், 13 ஜூலை, 2021

நல்ல தமிழ்ச் சொற்கள்— 4


நாதாரி

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பன்றி மேய்க்கும் சமூகத்தவரைக் குறிக்கக்கூடிய சொல்லாக இச்சொல் வழங்கப்பட்டது. இன்றும் இச் சமூகத்தவர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியத்தில் பன்னிரு நிலங்களை பின்வருமாறு தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

"தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றிஅருவா அதன்வடக்கு — நன்றாய சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண்" என்று 12 நிலங்களை செந்தமிழ் பேசும் நாடுகளாக அக்காலத்தில் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாடுகளாவன, 

1. தென்பாண்டி நாடு 2. குட்டநாடு

3. குடநாடு 4. கற்கா நாடு 

5. வேணாடு, 6. பூழி நாடு, 7. பன்றி நாடு, 

8. அருவா நாடு, 9. அருவா வடதலை நாடு, 

10. சீத நாடு, 11. மலைய நாடு (மலையமான் நாடு) 12. புனல் நாடு என்று 12 நிலங்களாக அக்காலத்தில் தமிழகம் விளங்கியது. இதில் பன்றிநாடு என்ற நாடு தற்போதைய தென் பகுதியாக விளங்குகின்ற திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பகுதியாக குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய தமிழகத்தின் தென்பகுதியில் பன்றி மேய்க்கக்கூடிய சமூகத்தைசா சார்ந்த மக்களை அழைக்கக்கடிய ஒரு பெயராக வழங்கப்பட்டது தான் நாதாரி என்ற சொல். ஆனால் இன்று அது வசைச் சொல்லாக மாறி இருப்பது வருத்தத்திற்குரியது.

படவா

இச்சொல் முடிதிருத்தும் தொழிலாளிகளைக் குறிக்கக்கூடிய சொல்லாக விளங்கியது. மேலும் முடிதிருத்தும் சமூகத்தில் இந்த படவா என்ற பிரிவினர் மேல்சாதியினர் வீட்டுக்கே சென்று முடி திருத்தும் பணியைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது. இங்கனம் முடிதிருத்தும் சமூகத்தை குறிக்கக் கூடிய ஒரு சொல் இன்று வசைச் சொல்லாக மாறி இருப்பது வேதனை தருகிறது.

வெட்டி வேலை

வெட்டி வேலை எனும் சொல்லானது ஒரு காலத்தில் ஏரி குளம் கண்மாய்களை வெட்டுபவர்கள் குறிப்பிடும் சொல்லாக கருதப்பட்டது. எவ்வாறெனில் அக்காலத்தில் ஏரி குளம் கண்மாய் இவற்றை வெட்டுவதற்கு கிராம மக்கள், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இதற்கு யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. காரணம் அவர்கள் யாரும் ஊதியம் பெற விரும்பவில்லை. இச்செயலை ஒரு தொண்டு மனப்பான்மையோடு செய்தார்கள் என்று தான் கூறவேண்டும். ஊரின் நன்மையே நம் நன்மை என்று கருதி அம்மக்கள் செய்தார்கள். ஆகவே அந்த வேலைக்கு அவர்கள் ஊதியம் பெறவில்லை. மண்வெட்டியால் மண்ணை வெட்டி ஏரி குளம் கண்மாய்களை ஏற்படுத்திய காரணத்தினால் இவ் வேலைக்கு வெட்டி வேலை அதாவது மண்ணை வெட்டும் வேலை என்று குறிப்பதற்காக வெட்டி வேலை என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று எந்த வேலையையும் செய்யாதவர்களைக் குறிப்பிடும் சொல்லாக இது பொருள் மாறி வழங்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. 

பொருள் மாறக் காரணம் என்ன?

நாம் நான்கு பகுதிகளாக நல்ல தமிழ்ச் சொற்கள் என்பது பற்றி பேசி வருகின்றோம். இத்தொடரில் வரும் அனைத்துச் சொற்களும் தற்போது பொருள் மாறி வழங்கப்பட்டு வருவதற்கு காரணம் என்ன? அதிலும் குறிப்பாக வசைச் சொற்களாக இவை வழங்கப்பட்டு வருவதற்கு காரணம் என்ன? அல்லது எவ்வாறு வசைச் சொற்களாக இவை மாறி இருக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் நோக்கினால், ஒரே ஒரு விஷயம் மட்டுமே தீர்வாக அமைகிறது. அது என்ன என்றால், அக்காலத்தில் நால்வருணப் பாகுபாடு என்பது தமிழகத்தில் பரவி கிடந்த ஒரு சமூக சீர்கேடான நிலை என்று கூறலாம். இந்நால்வருணப் பாகுபாடு பிற்காலத்தில் தொழில் அடிப்படையில் மக்களை பிரிக்கும் ஜாதிய பாகுபாடு என்று பேசப்பட்டது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு அல்லது அந்த பாகுபாட்டை உணர்த்துவதற்காகவே மீண்டும் மீண்டும் உயர்ந்த வகுப்பினைச் சார்ந்தவர்கள் தொழில்ரீதியான வர்க்கப் பாகுபாட்டினை உட்புகுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளக் கையிலெடுத்த ஆயுதமே இந்த வசைச் சொற்கள். தாழ்ந்த வகுப்பினைச் சார்ந்தவர்களாகக் குறிக்கக்கூடிய மக்களை குறிப்பிடும் சொற்கள் அனைத்தையும் அவர்கள் வசைச் சொற்களாக மாற்றி பயன்படுத்த ஆரம்பித்னர். அதன் காரணமாகவே இச்சொற்கள் அனைத்தும் என்று பொருள் மாறிய சொற்களாக, வசைச் சொற்களாக நிற்கின்றன. நின்று தவிக்கின்றன. இதன் மூலம் அக்கால சாதிய பாகுபாடு எந்த அளவுக்கு கொடும் தீயாகப் பரவி இருந்தது என்பதை நம்மால் உணர முடிகின்றது. அதுமட்டுமல்லாது சாதியப் பாகுபாட்டை உணர்த்துவதற்காகவும் இவர்கள் தாழ்ந்த சாதியினர் என்பதை மேலும் மேலும் வலியுறுத்துவதாகவும் அவர்களை குறிக்கக்கூடிய சமூகச் சொற்கள் அனைத்தையுமே மேல்தட்டு மக்களாக சமூகத்தில் வலம் வருவோர் வசைபாடும் சொற்களாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகின்றது.  இதில் வேதனையான செய்தி என்னவென்றால் ஒரு காலத்தில் மேல்தட்டு மக்களால் வசை பாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள் இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே. 
இனியாவது விழித்தெழுவோம். 

முற்றிற்று.



நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...