24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி 7.00 நான் முருகனிடம் வேண்டிக்கொண்டே செல்கிறேன் முருகா முதன்முதலாக உன்னை பார்க்க வருகிறோம். எங்களுக்காக நடை திறந்திருக்கட்டும்னு.
ஆட்டோ டிரைவர் எல்லாம் எனக்கு தெரியும்னு சொல்லி எப்பவும்போல சொதப்பி வேறபக்கம் போயிட்டார். அப்பறம் அங்கே விசாரிச்சு கோயிலுக்கு வந்தால் மணி 7.50 அவ்வளவு தான் கோயில் நடை சாத்திட்டாங்க. உள்ள போனால் அங்கே ஒரு பெரியவர் இருந்தார். அவர் கிட்ட கேட்கிறோம் நடை சாத்திட்டீங்களான்னு 2,3 முறை. அவர் என்ன நினைச்சாருன்னு தெரியவில்லை. வாங்க வந்து கும்பிடுங்கன்னு சொல்லி கதவைத் திறந்து உள்ள வாங்கன்னு சொன்னார். எனக்கென்னவோ அது முருகனே வாங்க ன்னு கூப்பிட்ட மாதிரி இருந்தது. சந்தோஷத்தில் எனக்கு ஒன்னுமே ஓடல.
பட்டர் இல்லாததால வாங்கிட்டு போன பூவை அங்கு வைக்க சொன்னார். காலையில் வந்து போட்டிருவாங்கன்னு சொன்னார். திருச்செந்தூர் போகும் போதெல்லாம் (எனக்கு கண் மைனஸ் பவர்) முருகன் தெளிவாக பார்க்க முடியாது. எந்த கோயில் போனாலும் இதே நிலை தான். அதனால் எந்த கோயில் போனாலும் கண்குளிர உன்னை தரிசனம் செய்ய வேண்டும் என்று மட்டும் தான் கேட்பேன். அதுமாதிரி ஓரளவு எவ்வளவு கூட்டம் கூட்டமாக இருந்தாலும் நின்னு தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் அவனருளால். அப்படி எல்லாம் ஏங்கித் தவித்ததால் தான் நேற்று அந்த ஏக்கம் தீர்ந்தது.
கொஞ்ச நேரத்தில பட்டரும் அங்கே வந்தார். முருக பக்தர் ஒருவர் பெயரைச் சொல்லி வீடியோ பார்த்துட்டு வர்றீங்களா? ன்னு கேட்டார். ஆமாம் என்றோம். மனதுக்கு நிறைவாக ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கொஞ்சம் கவலையாக இருந்தது. முருகா நீ எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறாய். ஆனால் ஓரிடத்தில் உனக்கு அலங்காரம் அபிசேகம் என்று எப்போதும் விழாக்கோலம் கொண்டு இருக்கிறாய். ஆனால் ஒரு சில இடங்களில் ஏன் இப்படி தனியானாக நிற்கிறாய்? என்று முருகனிடம் முறையிட்டேன். கனத்த மனதுடன் மிகவும் அமைதியாக வீடு வந்து சேர்ந்தோம்.
நன்றி முருகா 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக