இரண்டொரு நாள் முன்னதாக என் தோழி தன் புலனத்தில் அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்த கீழ்க்கண்ட வரிகள் என்னை மிகவும் பாதித்தன.
இந்த வரிகள் தந்த வலியால் எனக்குள் உதித்த வரிகள் இதோ👇
சுகத்திற்காக இருளைத்தேடும்
மிருகத்திடம் — வெளிச்சத்தைத்
தேடி இருளையே விழுங்கும் மனுஷி
அவளுக்குப் பெயர் என்னவோ வேசி!
சிலநிமிட உணர்ச்சிக்கு (உரசலுக்கு)
ஊன் தேடும் மிருகத்திடம் — கட்டிய
கணவனின் பிணி தீர்க்க, பெற்ற
பிள்ளையின் பசி போக்க ஒவ்வொரு
நொடியும் அம்புப்படுக்கையில் புரளும்
பிதாமகளுக்குப் பெயர் என்னவோ வேசி!
மனத்தால் காமக்கசடுகளைச் சுமக்கும்
மிருகங்களுக்கு மத்தியில் உடலால்
துரியோதன துச்சாதனன்களையும்
சேர்த்துச் சுமக்கும் திரௌபதிகளுக்குப்
பெயர் என்னவோ வேசி!
அண்ணல் நோக்கிய பிறகுதான்
அவளே நோக்கினாள் என்பதையும்
மறந்து அக்னிக்கு இரையாகச் சொன்ன
இராமன்களுக்கு மத்தியில் வேகும்
சீதைகளுக்குப் பெயர் என்னவோ வேசி!!!
