ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

அப்பாவுக்கு நன்றி

 

நான் அப்பா பிள்ளை என்று தான் எப்போதும் சொல்லிக்கொள்வேன். அவர் மிகவும் கோபக்காரர் தான். ஆனாலும் ஏனோ தெரியவில்லை அவரைத்தான் எனக்கு பிடிக்கும். 

அவர் எத்தனையோ விதங்களில் எனக்கு நல்ல நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். என்னை இந்த சமூகத்தில் நல்ல பெண்ணாக வளர்த்திருக்கிறார். தைரியமான பெண்ணாக துணிச்சல் மிக்க பெண்ணாக வளர்த்திருக்கிறார்.  அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் மூலம் எனக்கு தன்னுடைய கஷ்ட நஷ்டங்களைப் புரியவைத்திருக்கிறார். 

உதாரணமாக "காசோட அருமை தெரியுமா உனக்கு?" என்று அடிக்கடி கேட்பார். உண்மையில் சிறுவயதில் எனக்கு கோபம் வரும். ஆனால் எப்போது நான் சம்பாதிக்க ஆரம்பித்தேனோ, அப்போது தான் அவரின் கேள்வியில் உள்ள நிதர்சனத்தை அதன் கனத்தை உணர்ந்தேன். அதுமட்டுமல்ல அவர் மாடாய் உழைத்த உழைப்பின் உன்னதத்தையும் நான் பல நேரங்களில் உணர்ந்துள்ளேன். 

நான் பார்த்த என் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் அப்பாக்கள் போல் அல்ல என் அப்பா. அவர் முகத்துக்கு பவுடர்பூசிப் பார்த்ததில்லை. உடம்பில் வாசனை திரவியம் பூசியதில்லை. கண்ணாடி முன் நின்றுகொண்டு மணிக்கணக்கில் தலைவாரியதில்லை. போகும்போதும் வரும்போதெல்லாம் கண்ணாடியில் தன்னைத் தானே கண்டு ரசித்ததும் இல்லை. [இதை எல்லாம் செய்யும் அளவுக்கு அவர் அழகாயில்லையோ என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.] 
ஆனால் அவர் எங்களை அழகுபடுத்தி பார்த்தார். ஆனால் ஒன்று கண்ணுக்கு மைதீட்டுவது மட்டும் அவருக்கு பிடிக்காது. நாங்களும் கண்ணுக்கு மைதீட்டியதில்லை இன்றுவரை. 

அவர் யாரையும் குறை கூறியதில்லை. எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று தான் நினைக்கச் சொல்லுவார். இறைவனைக் கோவிலுக்குச் சென்று வழிபடத் தேவையில்லை. உன் மனதார நினை அதுபோதும் என்பார். கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைப்பது கூட அவருக்கு பிடிக்காது. காரணம் கடன் வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு என்பது அவருடைய வேதம். இருப்பதை வைத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவார். 

இப்படி மிகவும் கண்டிப்புடன் தான் எங்களை வளர்த்தார். அன்று அவர் கண்டிப்புடன் வளர்த்ததால் தான் இன்று நான் என் பிள்ளையை நன்முறையில் வளர்க்க முடிந்தது. அதற்காக அவருக்கு என் உயிர் உள்ளமட்டும் நன்றி கூறுவேன். 

என் அப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி... 





கருத்துகள் இல்லை:

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...