தீபாவளி ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளி கொண்டாடக் காரணங்கள்
திருமால் வராக அவதாரம் எடுத்தபோது பூமாதேவிக்குப் பிறந்த மகன் பவுமன் என்பவன் ஆவான். இவன் பிராக்ஜோதிசா என்னும் நாட்டை ஆண்டு வந்தான். இது இன்றைய அசாம் மாநிலம் ஆகும்.
பிரம்மனை நோக்கித் தவம் புரிந்தான் பவுமன். தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அதற்கு மரணமே தன்னை நெருங்க கூடாது என்று வரம் கேட்டான். ஆனால் பிரம்மனோ உலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பது நியதி என்று கூறினார். எனவே அவன் தன்னுடைய தாயால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மனும் அவ்வாறே வரம் அளித்தார்.
இப்படி சாகாவரம் பெற்ற அவன் அன்றுமுதல் நரகாசுரன் ஆனான். தேவர்களுக்கு மிகுந்த இம்சைகளை விளைவித்தான். அதுமட்டுமல்லாது பெண்களுக்கு மிகவும் தொல்லை அளித்து வந்தான்.
இதனால் ஆத்திரம் கொண்ட திருமால் தன்னுடைய கிருஷ்ணா அவதாரத்தில் சத்யபாமாவின் மூலமாக நரகாசுரனை அழிக்கத் திட்டமிட்டார். காரணம் கிருஷ்ண அவதாரத்தின் போது பூமாதேவியே சத்தியபாமாவாக அவதரித்தாள். சத்யபாமாவின் மூலம் நரகாசுரன் அழிக்கப்பட்டான். நரகாசுரன் வதைக்கப்பட்ட அன்று தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த காரணத்தினால், அன்றைய தினம் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமாலிடம் வரம் கேட்டான் நரகாசுரன். அதன் பொருட்டு தீபாவளி கொண்டாடப் படுகிறது என்று புராணம் கூறுகின்றது.
இது ஒருபுறம் இருக்க,
இராமாயண காலத்தில், இராவணனுடன் போர் புரிந்து ராமன் சீதையை மீட்டு, அயோத்தி திரும்பி வரும் அந்த நாளில், அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் விளக்கேற்றி இராமனை வரவேற்றதாகக் கூறப்படுகின்றது. அதன் பொருட்டு அன்றிலிருந்து அந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அதுமட்டுமல்ல,
கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். அங்ஙனம் சக்தியைத் தன்னுள் பாதியாக ஏற்றுக் கொண்டதும், சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக உருவம் பெற்றதும் இந்த தினத்தில்தான் என்று கூறுகின்றது கந்தபுராணம். அன்றுமுதல் அன்றைய தினம் தீபாவளியாக கொண்டாடப் படுகின்றது என்றும் கருத்து நிலவுகின்றது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக ஓர் உண்மை
சமணர்களின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்த போது அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் நிறைவுபெற்றது. அதனால் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்த படியே தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறு அடைந்தார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் வீடுபேறு அடைந்திருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு கலந்து ஆலோசனை செய்து, உலகத்திற்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் வீடுபேறு பெற்ற நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகின்றது.(தீபாவலி = தீபம் + ஆவலி. தீபம் என்றால் விளக்கு ஆவலி என்றால் வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்த படியால் தீபாவளி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதல்லவா. (சமணமும் தமிழும் — மயிலை சீனி. வேங்கடசாமி)
சிந்திக்க வேண்டியது,
நரகாசுரன் உடன் நிகழ்ந்த போர் இரவு முழுவதும் நடந்து விடியற்காலையில் நரகாசுரன் கொல்லப்பட்டான் என்று புராணம் கூறுகின்றது. ஆனால் யுத்த தர்மப்படி இரவில் போர் நிகழ்த்தக் கூடாது என்பது யாவரும் அறிந்ததே. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையில் மட்டுமே போர் நிகழும். மீண்டும் மறுநாள் சூரிய உதயத்தின் போது தான் போர் துவங்கும். ஆனால் நரகாசுரன் வதம் அல்லது நரகாசுரனுடன் நிகழ்ந்த போர் இரவில் நிகழ்ந்ததாகப் புராணம் கூறுகின்றது. இதிலிருந்து இப் புராணக்கதை புனையப்பட்டு இருக்கிறது என்பதை நாம் உணர முடியும்.
சமணர்களின் பல்வேறு வழக்கங்கள் இன்று இந்துக்களிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பின் சமணர்கள் பலர் இந்துக்களாக மாறினர் என்பதே.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக