வெள்ளி, 24 செப்டம்பர், 2021

எஞ்சாயி


நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த ஒரு விடயத்திற்கு இன்று விடை கிடைத்தது. அதனால் மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளேன். அது என்ன என்றால் சமீபத்தில் ஒரு பாடல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் மிகவும் பேசுபடு பொருளாக அது விளங்கியது. அப்பாடல் இதோ, 

"குக்கூ குக்கூ

தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி"
ஆம்! இப்பாடல் தான். இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்று கூறலாம். இசையாக இருக்கட்டும் பாடல் வரிகளாக இருக்கட்டும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நினைவுபடுத்தும் பாடலாக அனைவரும் பேசும் ஒரு பொருளாக விளங்கியது என்றால் மிகை இல்லை. 

அத்தகைய இப்பாடலில் எனக்கு முரண்பாடாக அல்லது உடன்பாடில்லாத சில வார்த்தைகள் இருப்பதாக உணர்ந்தேன். அந்த வார்த்தைகளைப் பற்றிய விளக்கங்களைத் தான் இன்றைக்கு இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். 

இப்பாடலில் பல்லவியை அடுத்துவரும் அனுபல்லவியில் கம்பளிப்பூச்சி எனும் சொல் வந்துள்ளது. அதாவது தண்ணீரில் ஓடும் தவளைக்கு கம்பளிப்பூச்சி தங்கச்சி எனும் வரிகள் இடம்பெற்றிருக்கும். 

"குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி"


முதலில் நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் கம்பளி என்பது பூச்சி இனம் அல்ல அது புழுவினம். பூச்சி இனங்களுக்கு நீளமான உடலமைப்பு இருக்காது. அது மட்டுமல்ல அவற்றிற்கு கால்கள் தனியாக இருக்கும். ஆனால் புழுக்களுக்கு கால்கள் தனியாக இருக்காது. அதன் உடலையே சுருக்கி விரித்து ஊர்ந்து செல்ல கூடிய உயிரினம் ஆகும். ஆகவே பேச்சுவழக்கில் கம்பளிப்பூச்சி என்ற சொல்வது தவறு என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். அங்ஙனம் இப்பாடலில் என்ன சொல் சரியான சொல்லாக பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றால் தம்பலப்பூச்சி என்பதே சரியான வார்த்தையாகும். தம்பலப்பூச்சி என்பது நாம் அனைவரும் பார்த்து தொட்டு தூக்கி ரசித்து விளையாடிய பூச்சி இனங்களில் ஒன்று. இதனை பேச்சுவழக்கில் பட்டுப்பூச்சி என்றும் அழைப்பர். சிவப்பு நிறமாக அதனுடைய மேல் தோல் பட்டுபோல மென்மையாக இருக்கக் கூடிய ஓர் அழகான பூச்சியினம். இதற்கு இந்திரகோபப்பூச்சி என்ற பெயரும் உண்டு.


இத்தம்பலப் பூச்சி பற்றி அகநானூற்றின் பாடல் ஒன்று இயம்புகின்றது. அப்பாடல் பின்வருமாறு;

"அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு" எனும் இவ்வரிகளில் ஈயல்மூதாய் எனும் சொல்லே தம்பலப்பூச்சியினை உணர்த்துகிறது என்பதை அறியமுடிகின்றது.

மேலும் இப்பாடலில் எஞ்சாயி எஞ்சாமி என்ற சொல் வருகின்றது. எஞ்சாயி என்னும் சொல்லைப் பிரித்தால் என் + ஆயி எனப் பிரியும். இதில் ஆயி என்பது குடும்பத்தின் மூத்த தலைவியாக விளங்கும் தாயின் தாயைக் குறிக்கும் சொல் ஆகும். ஆனால் இத்தகைய பொருள் பொதிந்த சொல்லை மொழிபெயர்ப்பு எனும் பெயரில் Enjoy என்று வழங்குவது வருத்தமளிக்கிறது. 


எஞ்சாயி எஞ்சாயா என்ற சொற்கள் நம்மில் பேசப்பட்டிருப்பதற்கு பழைய திருவிளையாடல் திரைப்படம் வசனம் சான்றளிக்கின்றது என்பது சற்றே மகிழ்ச்சி அளிக்கிறது. 

இங்ஙனம் முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் பேச்சுவழக்கு போன்றவற்றை மரபு மாறாமல் பின்பற்றப்பட்டால் இதுபோன்ற இடர்பாடுகள் அறியாப் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலும்.


4 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஆம் அம்மா 👏 அருமையான விளக்கம்

அழகுராஜ் ராமமூர்த்தி சொன்னது…

அதேபோல், எள்ளுவய பூக்கலயே என்ற பாடலும் அதிக வரவேற்பைப் பெற்ற பாடல். அதில் 'எள்ளுவயல்' எனும் சொல் சரியானதில்லை. எள் விளையும் இடத்தை வயல் என்று சொல்வதில்லை எள்ளுக்காடு என்று தான் சொல்வார்கள்.

நறுமுகை சொன்னது…

ஆம். உண்மை தான்.

Unknown சொன்னது…

நல்ல தகவல்

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...